‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ முன்னெடுப்பில் ரூ.1000 கோடியில் உதவிகள்: முதல்வர் நன்றி
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவு: ரூ.1000 கோடியை தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி. நல்லுள்ளங்களுக்கு நன்றி, இந்த ஆண்டு ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது திராவிடமாடல் அரசு. அரசின் முயற்சிகளுக்கு பக்கபலமாக, ரூ.5 லட்சம் முதல் நன்கொடையாக வழங்கி, ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ முன்னெடுப்பில் இதுவரை 1000 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கிலான அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, நவீன கழிப்பறை, திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை அரசு பள்ளிகளில் நிறைவேற்றியுள்ளோம். நம்மை வளர்த்த சமூகத்துக்கும் பள்ளிக்கும் உதவ வேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் 1,500 நன்கொடையாளர்களுக்கும் நன்றிகள். இத்தனை பேரின் நம்பிக்கையை காப்பாற்றும்படி வெளிப்படைத்தன்மையோடும் நேர்மையாகவும் செயல்பட்டு, நற்பெயரை பெற்றுத் தந்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ அறக்கட்டளை தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோருக்கு பாராட்டுகள்.