ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி சந்திப்பு அதிமுக மாஜி அமைச்சர்கள் நயினாருடன் ஆலோசனை
நெல்லை: பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் சந்தித்து பேசிய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் நேற்று நெல்லை மாவட்ட பாஜ அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்து அரைமணி நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஆகியோர் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர். பசும்பொன்னில் அவர்கள் சந்தித்து பேசியிருப்பதால் பலம் யாருக்கு, பலவீனம் யாருக்கு என்பது அவர்கள் வெளியே என்ன கூறுகிறார்கள் என்பதை பொருத்துதான் அமையும். அதைப்பற்றி நான் இப்பொழுது கருத்துக்கள் தெரிவிக்க முடியாது. அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.தவெகவுடன் கூட்டணி குறித்து இப்போது கூறமுடியாது. தேர்தல் காலங்களில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. நிரந்தர எதிரிகளும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* மூவர் சந்திப்பு ஒருநாள் பரபரப்பு: உதயகுமார்
ஆலோசனைக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறுகையில், ``திருமண விழா குறித்து அழைப்பு விடுக்கவே பாஜ மாநில தலைவரை நேரடியாக சந்தித்தோம். செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகிய மூன்று பேர் சந்திப்பு எவ்வித பின்னடைவையும் ஏற்படுத்தாது. இதுகுறித்து எங்களுடைய பொதுச்செயலாளர் கருத்தை தெளிவாக கூறிவிட்டார். அது ஒரு நாள் பரபரப்பு. நீங்கள் அதை மிகையாக பேசி பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது புதிது இல்லை’’ என்றார்.