‘முதல்வர் அறிவிப்புக்கு வரவேற்பு’ ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன்: எடப்பாடி பரபரப்பு பேட்டி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி அவரது நினைவாலயத்தில் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேவர் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு தனது வாழ்நாளில் சுமார் 4000 நாட்கள் சிறையில் இருந்தவர். தனக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்கு பிரித்துக் கொடுத்து கொடை வள்ளலாக திகழ்ந்தார். அவருக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் மத்திய உள்துறை அமைச்சரிடம் கடிதம் அளித்துள்ளோம் என்றார்.
தேவருக்கு பாரத ரத்னா விருது தொடர்பான கோரிக்கையை அரசு வழிமொழியும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது குறித்த கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு தெரிவித்தார். ஓபிஎஸ், செங்கோட்டையன் இருவரும் ஒரே காரில் பசும்பொன் வருவது குறித்த கேள்விக்கு, `அது குறித்து எனக்கு தெரியாது. வந்தால்தான் தெரியும். அதன்பிறகு பதில் சொல்கிறேன்’ என்றார்.