எதிர்க்கட்சிகள் மீது தொடர் அவதூறு அவமதிப்பு அமைச்சகத்தை பிரதமர் மோடி உருவாக்கலாம்: பிரியங்கா காந்தி பிரசாரம்
சஹர்சா: ‘‘அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மீதும் அவதூறு கூறுவதில் மட்டுமே கவனமாக இருக்கும் பிரதமர் மோடி, புதிதாக அவமதிப்பு அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்’’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். பீகாரில் சஹர்சா மாவட்டத்தில் உள்ள சோனாபர்சாவில் நேற்று நடந்த தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது: பீகாரில் பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி தேவையற்ற பிரச்னைகள் குறித்து பேசுகிறார்.
இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஊழல், தவறான ஆட்சி குறித்த குற்றச்சாட்டு குறித்து அவர் வாய் திறப்பதே இல்லை. வளர்ச்சி பற்றி பேசுவதற்கு பதிலாக, ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரையும், நாட்டையும், பீகாரையும் அவமதிக்கிறார். பேசாமல் அவர் அவமதிப்பு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்க வேணடும். ஏனென்றால் அதில் தான் அவரது அரசு கவனம் செலுத்துகிறது. மோடியும் அமித்ஷாவும் கடந்த 20 ஆண்டுகளில் பீகாருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்ன செய்தது என்பதற்கு முதலில் பதிலளிக்க வேண்டும்.
பீகார் அரசாங்கத்தை நிதிஷ்குமார் நடத்தவில்லை. பிரதமரும் அவரது சகாக்களும் தான் டெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குகிறார்கள். பீகார் இளைஞர்கள் இங்கு வேலையில்லாததால் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வேலைவாய்ப்பை உருவாக்கும் அனைத்து முக்கிய பொதுத்துறை நிறுவனங்களும் பாஜவின் நண்பர்களான தொழிலதிபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.