ஊட்டி தாவரவியல் பூங்காவில் மேரிகோல்டு, டேலியா மலர்கள் அழுகியதால் புதிய மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் மாடங்களில் வைக்கப்பட்டிருந்த மேரிகோல்டு, டேலியா உள்ளிட்ட சில மலர் செடிகள் அழுகியதால் தொட்டிகள் மாற்றப்பட்டன. நீலகிரி மாவட்டத்திற்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், இவ்விரு மாதங்கள் இரண்டாம் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. இவ்விரு மாதங்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை கவர பெரிய அளவிலான விழாக்கள், கண்காட்சி போன்றவைகள் நடத்தப்படுவதில்லை. எனினும், தாவரவியல் பூங்காவில் மட்டும் புதிதாக மலர் செடிகள் நடவு செய்யப்படும்.
அதேபோல், 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அந்த தொட்டிகள் அலங்கரித்து வைக்கப்படும். இம்முறையும் இரண்டாம் சீசனை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரங்கள் மேற்க்கொள்ளப்பட்டன. இதனை கடந்த இரு மாதங்களாக சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். 17 ஆயிரம் தொட்டிகளில் மாடங்களிலும், 5 ஆயிரம் தொட்டிகளை கொண்டு பெர்னஸ் புல் மைதானத்திலும் பல்வேறு வடிவங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர், இந்நிலையில், பூங்கா நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மேரி கோல்டு மலர்கள் தொடர் மழையால் பாதிக்கப்பட்டன.
அதேபோல், பெர்னஸ் புல் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரத்திலும் உள்ள மேரி கோல்டு மலர்கள் பாதிக்கப்பட்டன. மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகளில் உள்ள மலர்கள் அழுகின. குறிப்பாக, டேலியா, மேரிகோல்டு மற்றும் சில மலர் செடிகள் அழுகியது. இதனால், இந்த மலர் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக தற்போது வேறு மலர் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை சுற்றுால பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.