ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அதிகளவில் காய்த்து தொங்கும் பப்பாளி
ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள அழகு தாவரங்களில் ஒன்றான பப்பாளி மரத்தில் பழங்கள் அதிகளவு காய்த்துள்ளதால், அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு அழகு தாவரங்கள், மரங்கள் மற்றும் மலர்செடிகள் உள்ளன.
வெளி நாடுகளில் காணப்படும் பெரணி செடிகள், கள்ளிச்செடிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கண்டு ரசித்து செல்வதுடன், இதுதொடர்பான ஆராய்ச்சிகளும் மேற்கொள்கின்றனர். இந்த பூங்காவில் உள்ள வெளிநாட்டு மரங்களில் அவ்வப்போது மலர்கள் பூத்து காணப்படும்.
குறிப்பாக, சீனாவின் தேசிய மலரான குயின்ஆப் சைனா போன்ற மலர்கள் பூத்து சுற்றுலா பயணிகளை ஆச்சரியத்திற்குள்ளாக்கும். இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பப்பாளி மரம் ஒன்றில் (அழகு தாவர வகை) சிறு சிறு பப்பாளி பழங்கள் அதிகளவு காய்த்துள்ளன.
பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த பழங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். அழகு தாவரங்களில் காய்த்துள்ள இந்த பழங்களை பார்த்து ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள் அதனை சுவைக்க அச்சப்படுகின்றனர்.