கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறும் வசதி அறிமுகம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம். கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்த நிலையில், https://www.psckfs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்திற்கு படகில் செல்ல ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு முறை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரியில் கடலின் நடுவில் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை படகில் சென்று சுற்றுலா பயணிகள் ரசிப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. அதன்படி பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்று வருகிறது.
தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறும். இதில் சாதாரண படகு கட்டணமாக ஒருவருக்கு ரூ.50-ம், வரிசையில் நிற்காமல் நேரடியாக செல்வதற்கு கட்டணமாக ரூ.200-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
படகு போக்குவரத்துக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இல்லாததால், வெளிமாவட்டங்களில் இருந்து தாமதமாக வரும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகு போக்குவரத்துக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையை அமல்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையை நேற்று முதல் அறிமுகம் செய்தது. இதற்காக https://http://psckfs.tin.gov.in/ ன்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த சுற்றுலா பயணிகள் ஆன்லைன் முறைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.