ஒடிசாவில் ரயில் தண்டவாளம் அருகே நின்று ரீல்ஸ்.. உடல் சிதறி சிறுவன் உயிரிழப்பு..!!
பூரி: ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தில் தண்டவாளம் அருகே நின்று ரீல்ஸ் எடுத்த சிறுவன், ரயில் மோதி உயிரிழந்தார். ஒடிசா மாநிலம் புரி மாவட்டம் மங்கலகட் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் விஷ்வஜித் ஷா. இந்த சிறுவன் நேற்று தனது குடும்பத்துடன் ஜானக்தேவ்பூர் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளான். இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் கோவிலில் இருந்த நிலையில், சிறுவன் விஷ்வஜித் ஷா மட்டும் கோவிலுக்கு அருகே உள்ள ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றுள்ளான். பின்னர், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்வதற்காக தண்டவாளத்தில் நின்றவாறு தனது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளான்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ரயில் மோதியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ரயில்வே போலீசார், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் மீது ரயில் மோதிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுப்பதை கைவிடுமாறு காவல் துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், ரீல்ஸ் மோகத்தால் இளைஞர்களும், சிறுவர்களும் உயிரை விடும் சம்பவங்கள் தொடர்வது வேதனை அளிப்பதாக உள்ளது.