அக்.27ம் தேதி சூரசம்ஹார விழா திருச்செந்தூரில் கடற்கரையை சமன்படுத்தும் பணிகள் தீவிரம்
திருச்செந்தூர் : வரும் 27ம் தேதி நடைபெறும் சூரசம்ஹார விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையை சமன்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஸ்தல புராணத்தை உணர்த்தும் கந்தசஷ்டி திருவிழா, வரும் 22ம் தேதி தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், வரும் 27ம் தேதி திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் நடைபெறுகிறது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் கோயில் வளாகத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பதற்காக தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணியும், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையை சமன்படுத்தும் பணியும் தொடங்கி நடந்து வருகிறது.
கடற்கரையில் அய்யா கோயில் அருகில் இருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மணல்மேடுகள் அகற்றப்பட்டு சமன்படுத்தப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் இந்த பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு கடற்கரையில் கம்புகளால் சாரங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.