8 போட்டிகளில் வென்று முதலிடம்; உலக கோப்பை கால்பந்து தகுதி பெற்றது நார்வே: 1998க்கு பின் சாதனை படைத்தது
வெனிஸ்: இத்தாலியின் வெனிஸ் நகரில் நேற்று நடந்த தகுதிச் சுற்று கால்பந்து போட்டியில் இத்தாலி அணியை 4-1 என்ற கோல் கணக்கில் அசத்தலாக வீழ்த்திய நார்வே அணி, 2026 ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ளது. வரும் 2026 ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியை நடத்தும் இந்த 3 நாடுகளும் உலகக் கோப்பை போட்டிகளில் ஆட நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மற்ற அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இத்தாலியின் வெனிஸ் நகரில், ஐ பிரிவில் நேற்று நடந்த கடைசி தகுதிச் சுற்றுப் போட்டியில் இத்தாலி - நார்வே அணிகள் மோதின. போட்டி துவங்கி 11வது நிமிடத்தில் இத்தாலி வீரர் பியோ எஸ்போஸிடோ அபாரமாக கோல் அடித்து தமது அணியை முன்னிலைப்படுத்தினார்.
ஆனால், அதன் பின் பொறுப்பை உணர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய நார்வே வீரர்கள் போட்டியின் இறுதி வரை ஆதிக்கம் செலுத்தினர். போட்டியின் 63வது நிமிடத்தில் நார்வேயின் ஆன்டோனியோ நூஸா ஒரு கோல் போட்டார். அவரைத் தொடர்ந்து, 78 மற்றும் 79வது நிமிடங்களில் நார்வேயின் எர்லின் ஹாலண்ட் அடுத்தடுத்து 2 கோல்களை போட்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார். கடைசியாக, 90 3வது நிமிடத்தில் நார்வே வீரர் ஜார்கன் ஸ்ட்ராண்ட் லார்சன் அணியின் 4வது கோல் போட்டு ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணியை வெற்றி வாகை சூடியது நார்வே. இதனால், ஐ பிரிவில் 24 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த அந்த அணி, 1998ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆட தகுதி பெற்று அசத்தியுள்ளது. தகுதிச் சுற்றுகளில் 9 போட்டிகளில் ஆடிய நார்வே, 8ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.