வேட்பு மனுவில் தவறான தகவல்கள் வழக்கை ரத்து செய்யக்கோரிய கே.சி.வீரமணியின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
அதன் அடிப்படையில், திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் கே.சி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தல் தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தல் அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளாக மாறி விடுவதால் அவர்கள் இந்த வழக்கை தொடர முடியாது. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், 2021ம் ஆண்டு ராமமூர்த்தி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், வருமானவரித்துறை விசாரித்து அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. வருமானவரித்துறை அளித்த அறிக்கையில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சொத்து விவரங்களை மறைத்துள்ளதும், போலியான பான் எண்ணை குறிப்பிட்டிருந்ததும் தெரிய வந்தது.
தேர்தல் முடிந்தாலும் தேர்தல் அதிகாரி பதவி பறிக்கப்பட்டு விடாது என்று வாதிட்டார். இதேபோல புகார்தாரர் தரப்பில் வழக்கறிஞர் ஹரிகுமார் வாதங்களை முன் வைத்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் பின்னர் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.