கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் மீது உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி..!!
கம்பம்: கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர் மீது உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது. கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 24 நகர் மன்ற உறுப்பினர்கள் திமுகவை சேர்ந்தவர்கள், 7 நகர்மன்ற உறுப்பினர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள், காங்கிரஸ் 1, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 1. மொத்தம் 33 நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளனர் .
இதில் திமுகவை சேர்ந்த வனிதா நெப்போலியன் நகர்மன்ற உறுப்பினராக உள்ளார். அதே போன்று சுனேதா செல்வகுமார் துணை தலைவராக உள்ளார். இந்த தலைவர் மற்றும் துணை தலைவர் மீது திமுகவை சேர்ந்த 16 நகர்மன்ற உறுப்பினர்களும், 6 அதிமுக உறுப்பினர்கள் என மொத்தம் 22 நகர் மன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் நகர்மன்ற கூட்டத்தில் பிரச்சனையில் ஈடுபட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தனர்.
அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. கம்பம் நகராட்சியில் உள்ள கூட்டரங்கில் வருவாய் கோட்டாட்சியர் முகமது சையது முன்னிலையில், கம்பம் நகராட்சி ஆணையர் உமாசங்கர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இன்று 19 நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதில் அரசின் முடிவுப்படி 5ல் 4பங்கு இருக்க வேண்டும். ஆனால் 33 கவுன்சிலர்களில் 27 கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தால் மட்டுமே செல்லுபடியாகும்.
ஆனால் குறைந்த அளவில் உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் 19 நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால் தேர்தல் நடத்தும் அலுவலர் குறைந்த எண்ணிக்கையில் உள்ள நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்க முடியாது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியை தழுவியது.
தீர்மானம் தோல்வியை தழுவியதை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த நகர்மன்ற உறுப்பினர்கள் நகர்மன்ற கூட்டத்தை விட்டு வெளியே சென்றனர். நகராட்சி ஆணையாளர் உமாசங்கர் நகர்மன்ற உறுப்பினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்ததாக அறிவித்தார்.