5 நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்த நீலகிரி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது!!
நீலகிரி: தண்டவாளத்தில் மண்சரிவு, பாறைகள் விழுந்ததால் . கடந்த 18ம் தேதி இரவு மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக கல்லாறு முதல் ஹில்க்ரோவ் ரயில் நிலையம் வரை 14 இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததில் ரயில் பாதை சேதமடைந்தது. இதனால் கடந்த 5 நாட்களாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. பணிகளை விரைந்து முடித்து, மலை ரயில் இயக்குவதற்கான நடவடிக்கைகளை ரயில்வே துறையினர் மேற்கொண்டனர்.
அதன்படி, ரயில் பாதை முழுமையாக சீர் செய்யப்பட்ட பிறகு 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டது. இயற்கையின் அழகினை ரசித்தபடி சுற்றுலா பயணிகள் ரயிலில் பயணித்தனர். குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 5 நாட்களுக்கு பிறகு மலை ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.