நைஜீரியாவில் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் வெடித்ததில் 39 பேர் பலி: 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
அபுஜா: நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் வெடித்ததில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவின் நைஜர் மாகாணம் பீடாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று அகே நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த டேங்கர் லாரி அதிகாலை 4 மணியளவில் எசான் அருகே சென்றபோது பள்ளத்தில் விழுந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த எசான் சுற்றுவட்டார பகுதி மக்கள் விபத்திற்குள்ளான லாரியில் இருந்து சாலையில் ஆறாக ஓடிய எண்ணெயை சேகரித்தனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் எண்ணெய் சேகரித்து கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் உள்ள மோசமாகப் பராமரிக்கப்படும் சாலைகளால் டேங்கர் லாரி விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மேலும் இந்த விபத்துக்கள் பெரும்பாலும் அதிக வேகத்தாலும், போக்குவரத்து விதிகளை புறக்கணிப்பதாலும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அங்குள்ள மக்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக, இதுபோன்ற விபத்துகளின் போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து எரிபொருளைச் சேகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.