புதிய ஜிஎஸ்டி வரி அமலாகும் நிலையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி உரை: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
புதுடெல்லி: பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக வெளியான தகவலால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விகிதங்களில் மாற்றம் செய்வது தொடர்பாக கடந்த 4ம் தேதி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதில், அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் பலவற்றின் மீதான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதோடு, வரி விதிப்பு முறையும் 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. இந்த புதிய வரி குறைப்பு அறிவிப்புகள் நாளை முதல் அமலுக்கு வர இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 5 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக முன்னணி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், பிரதமர் அலுவலகம் தரப்பில் இருந்து இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. பிரதமரின் இந்த உரை, புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தங்கள் மற்றும் அதனால் பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கமளிப்பதாக இருக்கலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் உரை குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக பிரதமர் அலுவலகத்தின் இணையதளம், சமூக வலைதளப் பக்கங்கள் மற்றும் நம்பகமான செய்தி தொலைக்காட்சிகளை தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.