புதிய உச்சம்
தங்கம் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் ஒரு அங்கமாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தங்கத்திற்கு நிகரான முதலீடுகள் எதுவுமே இல்லை எனலாம். குறிப்பாக தென்னிந்தியாவில் பொதுமக்கள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். குழந்தை பிறப்பது தொடங்கி, பல்வேறு சுபநிகழ்வுகளில் ‘தங்கம்’ ஒரு தனி மனிதரின் செல்வ செழிப்பின் அடையாளமாகவே கருதப்படுகிறது. அதிலும் பெண் குழந்தைகள் என்றால் பிறந்தது முதல், திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு செல்லும் வரையில் பல சவரன் நகைகளை அணிவித்து அனுப்பும் வழக்கம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்னமும் உள்ளது. தங்கத்தின் விலை உயர்வு சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினம்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்தியாவில் தங்கத்தின் மதிப்பு நாள்தோறும் கூடிக்கொண்டே செல்லும் நிலையில், இரு தினங்கள் தங்கம் விலை குறைந்தால் கூட, மறுதினமே தங்கத்தின் விலை இரு மடங்கு ஏறத் தொடங்கி விடுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்தே பங்கு சந்தைகளில் ஏற்படும் திடீர், திடீர் சரிவுகள், தங்கத்தின் விலையேற்றத்திற்கு காரணமாக உள்ளன. குறிப்பாக தங்க சந்தையில் முதலீடு பாதுகாப்பானதாக பொதுமக்களுக்கு தென்படுகிறது. அந்தவகையில் தற்போது தங்கத்தின் விலை இப்போது வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை கடந்து, ஒரு பவுன் ரூ.80 ஆயிரத்தை தாண்டி விட்டது. விரைவில் ஒரு பவுன் தங்கம், ஒரு லட்சம் என்கிற நிலை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒரு கால் நூற்றாண்டு காலத்தில் இந்தியாவின் தங்கத்தின் மதிப்பு தலைகீழாக மாறிபோனதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
கடந்த 2000ம் ஆண்டில் ஒரு பவுன் ரூ.3 ஆயிரத்தை தாண்டியிருந்தது. இன்று ஒரு பவுன் தங்கத்திற்கான விலை ரூ.80 ஆயிரத்தை அன்று யாராவது வைத்திருந்தால், 22 பவுன் நகை வாங்கிக் கொள்ள முடியும் என்ற அலாதியான நிலையெல்லாம் காணப்பட்டது. அதன் பின்னர் 2009ம் ஆண்டுக்கு பின்னர் தங்கத்தின் விலையேற்றம் மெல்ல மெல்ல நிகழ தொடங்கியது. 2016ம் ஆண்டு வரை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் பவுனுக்கு ரூ.5 ஆயிரம் என தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. ஆனால் 2019ம் ஆண்டுக்கு பின்னர் இந்நிலையும் மாறி, இப்போது ஒவ்வொரு ஆண்டு இடைவெளியிலும் பவுனுக்கு ரூ.5 ஆயிரம் உயர்வு என்கிற உச்சநிலையை தங்கம் எட்ட தொடங்கி விட்டது. அதிலும் கடந்த ஓராண்டு காலம் தங்கத்தின் விலையேற்றம் தாறுமாறாக உள்ளது. உதாரணமாக கடந்த 2023ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.45 ஆயிரமாக இருந்த நிலையில், 2024ம் ஆண்டில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரமாக மாறியது.
கடந்த ஓராண்டில் இந்தியாவில் போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களே இவ்வாண்டில் பவுனுக்கு ரூ.30 ஆயிரம் வரை தங்கம் விலை அதிகரிப்புக்கான காரணமாகும். மேலும் ஒன்றியத்தை ஆளும் பாஜ ஆட்சியில் விலைவாசியும் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்லும் நிலையில், தங்கத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த அவர்கள் துளிகூட நடவடிக்கை எடுக்கவில்லை. தங்கத்தின் மதிப்பு இனிவரும் காலங்களில் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என சரிந்தால் மட்டுமே, சாமானிய மக்களுக்கும் முதலீட்டு பொருளாக தங்கம் இருக்க கூடும். இல்லையெனில் ஏழை, நடுத்தர மக்களின் ஏக்க பொருளாக தங்கம் மாறிவிடக்கூடும்.