குளச்சல் துறைமுகத்தில் ரூ.10 லட்சத்தில் புதிய மீனவர் ஓய்வறை
*பிரின்ஸ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
குளச்சல் : குளச்சல் நகராட்சி 23வது வார்டு துறைமுகத்தில் மீனவர்கள் ஓய்வெடுக்கும் அறை ஓலையால் வேயப்பட்டிருந்தது. இந்த ஓலை கொட்டகை கடந்த பல நாட்களாக சேதமடைந்து காணப்பட்ட நிலையில், இதனை சீரமைக்க வேண்டும் என குமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங். தலைவர் ஸ்டார்வின் மற்றும் வார்டு கவுன்சிலர் ஜாண் பிரிட்டோ ஆகியோர் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்சிடம் கோரிக்கை விடுத்தனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட்டிலான புதிய ஓய்வறை கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து புதிய ஓய்வறைக்கு நகர்மன்ற தலைவர் நசீர் தலைமையில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட காங்.தலைவர் கே.டி.உதயம் ஆகியோர் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர்.
மீனவர் காங். தலைவர் ஸ்டார்வின், நகர்மன்ற துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், கவுன்சிலர் ஜாண் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காங். துணைத்தலைவர் தர்மராஜ், மாவட்ட அமைப்பு தலைவர் சாமுவேல் சேகர், அகில இந்திய காங்.கமிட்டி உறுப்பினர் விஜிலியஸ், மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், கவுன்சிலர்கள் மேரி, பனிக்குருசு, ரமேஷ், சுஜித்திரா மற்றும் அந்திரியாஸ், லாலின், ஷாபி, பசீர்கான் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.