புதிய டிஜிபி வெங்கட்ராமனை மூத்த அதிகாரிகள் புறக்கணித்தார்களா..? பரபரப்பு தகவல்கள்
சென்னை: தமிழக டிஜிபி வெங்கட்ராமனை மூத்த அதிகாரிகள் புறக்கணித்ததாக வேண்டும் என்ேற தகவல்கள் பறப்பப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால், கடந்த 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வு பெற்றார். புதிய பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் பிற்பகலில் பதவி ஏற்றார். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், பாலநாகதேவி, ஐஜிக்கள் அன்பு, கபில்குமார் சரத்கர் உள்ளிட்ட ஒரு சில அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் பல அதிகாரிகள் புறக்கணித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை மூத்த அதிகாரிகள் மறுக்கின்றனர்.
டிஜிபியாக சங்கர்ஜிவால் பதவி ஏற்றபோது, அப்போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண், தலைமையில் ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் உள்ளிட்ட ஒரு சில அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். அதுவும் வேலை நாட்களில் பதவி ஏற்றார். அப்போதும் குறைவான அதிகாரிகளே பங்கேற்றினர். பதவி ஏற்புக்குப் பிறகு ஒவ்வொரு பிரிவு அதிகாரிகளும் தங்களுடன் குழுவினருடன் சென்று சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோலத்தான் ஞாயிற்றுக்கிழமையும் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது டிஜிபி அலுவலகத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். நேற்று காலை முதல் ஒவ்வொரு பிரிவின் அதிகாரிகளும் தங்களுக்கும் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுடன் சென்று சந்தித்து வருகின்றனர்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் டிஜிபி அலுவலக அதிகாரிகள் வரவில்லை. மேலும், சென்னையில் விநாயகர் ஊர்வலம் மற்றும் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி முழுமையாக முடிந்து, ஊர்வலம் சென்றவர்கள் வீடுக்குச் சென்ற பிறகுதான் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் முதல் காவலர்கள் வரை பலரும் அதிகாலை 2 மணிக்குத்தான் வீடுகளுக்குச் சென்றனர். அதேபோலத்தான் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார் மற்றும் புறநகர் எஸ்பிக்கள், தாம்பரம், ஆவடி போலீஸ் கமிஷனர்களும் பங்கேற்கவில்லை. மேலும் வெங்கட்ராமனை விட சீனியர் அதிகாரிகளான சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர், வன்னியபெருமாள், அபய்குமார் சிங் ஆகியோர் வரவில்லை.
வெங்கட்ராமன், அவர்களை சென்று சந்திப்பது தான் மரபு. இதனால் நேற்று காலையில், தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் உள்ளிட்ட பல செயலாளர்களை வெங்கட்ராமன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் மூத்த போலீஸ் அதிகாரிகளை அவர் சந்திப்பதுதான் நடைமுறை. இதனால் வேண்டும் என்றே சிலர் திட்டமிட்டு இதுபோன்ற வதந்திகளை திட்டமிட்டு பரப்புகின்றனர் என்கின்றனர். அவர்கள் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.