நேபாள வன்முறை பலி 72 ஆக உயர்வு; துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிடவில்லை: மாஜி பிரதமரின் விளக்கத்தால் பரபரப்பு
காத்மாண்டு: நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மறுத்துள்ளதுடன், இதுகுறித்து விசாரணை நடத்தவும் கோரியுள்ளார். நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் ஊழலுக்கு எதிராக ‘ஜென் இசட்’ என்ற இளையோர் குழுவினர் நடத்திய மாபெரும் போராட்டங்களால் நாடு தழுவிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் 3 காவலர்கள் உட்பட 72 பேர் உயிரிழந்தனர்.
போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம், அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு தீ வைத்ததால் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி கடந்த 9ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய இடைக்கால பிரதமராக கார்க்கி பதவியேற்றதை தொடர்ந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு தற்போது நேபாளத்தில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில், போராட்டத்தை முன்னெடுத்த ‘ஜென் இசட்’ குழுவினர் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவின் ஆலோசகர்களில் ஒருவரான டாக்டர் நிக்கோலஸ் புஷால், ‘கடந்த 8ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் ஒலி, அமைச்சர் ரமேஷ் லேக்கக் ஆகியோரே நேரடி பொறுப்பு. எனவே அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
இதனிடையே, அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் பிரதமர் ஒலி, ‘ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அரசு உத்தரவிடவில்லை’ என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், ‘காவல்துறையினரிடம் இல்லாத தானியங்கி துப்பாக்கிகளால் போராட்டக்காரர்கள் மீது குண்டுகள் சுடப்பட்டுள்ளன. அமைதியான போராட்டத்தில் ஊடுருவியவர்களே வன்முறைக்கு காரணம். எனவே, இதுகுறித்து கட்டாயம் விசாரிக்கப்பட வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.