நெல்லை, கோவையில் ஈ.டி. ரெய்டு : ரூ.50 லட்சம் பறிமுதல்
நெல்லை: நெல்லை பாளையங்கோட்டை தியாகராஜநகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தனியார் வங்கி அதிகாரி சிவசுப்பிரமணியன் (61). இவர் பணியில் இருந்த போதே வங்கி பரிவர்த்தனை அளவுக்கு அதிகமாக செய்துள்ளதாகவும், அதன் மூலம் கிடைத்த லாபத்தில் பல இடங்களில் நிலங்கள், வீடுகள் வாங்கியுள்ளதாகவும் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் அமலாக்கத்துறைக்கு சென்றன. இதையடுத்து, இவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 4 மணி நேரம் சோதனை நடத்தினர்.
அவரிடமிருந்து இரண்டு செல்போன்களில் இருந்த பல தகவல்களை அமலாக்கத்துறையினர் நகல் எடுத்துக் கொண்டனர். அவரது படுக்கை அறையில் கட்டில் மெத்தையை தூக்கி பார்த்த போது அதில் ரூ.500 நோட்டுக்களாக ரூ.50 லட்சம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை பறிமுதல் செய்தனர். மேலும், டிஜிட்டல் ஆவணங்களும் சிக்கின. அவரது லேப்டாப்பையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதேபோல் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செலக்கரிச்சல் பகுதியில் பஞ்சாலை வைத்து நடத்தி வருபவர்கள் தம்பதியர் ராமச்சந்திரன், கோமதி. இவர்களது மகள் சௌமியா பஞ்சாலையில் ஒரு பங்குதாரராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆலை துவங்க மூவரும் பல்வேறு வங்கிகளில் அதிக அளவில் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராமச்சந்திரன் தங்களது வங்கிக் கடன் மொத்தத்தையும் ஒரே தவணையில் வங்கியில் செலுத்தியததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராமச்சந்திரனுக்கு சொந்தமான பஞ்சாலை மற்றும் அவரது வீடு அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீடு ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணக்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.