தேசிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவதாக ஒன்றிய அரசு எங்களை மிரட்டி அடிபணிய வைக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதற்காக தமிழக அரசு சார்பில் குறைவான தொகை மட்டுமே வழங்குவதாக தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2024-25ம் ஆண்டு கல்வி கட்டணத்தையும், 2025-26ம் கல்வி ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட, உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தையும் செலுத்த அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை வழங்கவில்லை என கூறி தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணை வந்தது. பள்ளிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி நீதிமன்ற உத்தரவுபடி உரிய தொகை வழங்கப்படவில்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 60 சதவீத நிதியை ஒன்றிய அரசும், 40 சதவீத தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும் என்ற நிலையில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஒத்துக் கொண்டால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது என்றார்.
உடனே நீதிபதி, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் நிதி கொடுப்பார்களே என்றார். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு தமிழக அரசு அடிபணியாது. இதுகுறித்து உரிய அறிக்கையை தாக்கல் செய்கிறோம் என்றார். இதையடுத்து, நீதிபதி வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 24ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.