மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுடன் நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனை
சென்னை: தமிழக பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்த ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை அணிகளில் மீண்டும் இணைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் வரும் 12ம் தேதி முதல் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.