நாகர்கோவிலில் ரிசார்ட்டில் பார்ட்டி கொண்டாட்டம்: பஸ் நிலையத்தில் குடிபோதையில் தள்ளாடி விழுந்த இளம்பெண்
நாகர்கோவில்: இரவில் நண்பர்களுடன் ரிசார்ட்டில் பார்ட்டி கொண்டாடிய இளம்பெண், காலையிலும் போதை தெளியாத நிலையில் பஸ் நிலையத்தில் தள்ளாடி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இன்று காலை சுமார் 8 மணியளவில் ஆட்டோவில் இருந்து 2 இளம்பெண்கள் இறங்கி வந்தனர். இவர்கள் இருவருக்குமே சுமார் 25 வயதுக்குள் இருக்கும். இதில் ஒரு இளம்பெண் வெள்ளை கலர் டீ ஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் மட்டுமே அணிந்த நிலையில் தள்ளாடிய படி ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்து வந்தார். அவருடன் வந்த மற்றொரு இளம்பெண், கை தாங்கலாக அந்த இளம்பெண்ணை ஆட்டோவில் இருந்து இறக்கி அழைத்து வந்தார்.
பஸ் நிலைய நடைபாதை படிக்கட்டில் இறங்கிய போது திடீரென தள்ளாடிய நிலையில் வந்த இளம்பெண் தவறி கீழே விழுந்தார். இதை பார்த்ததும் பயணிகள் சிலர் ஓடி சென்று காப்பாற்ற முயன்றனர். அப்போது தான், தள்ளாடி விழுந்த இளம்பெண் நன்றாக மது போதையில் இருந்தது தெரிய வந்தது. போதையில் உளறியவாறு இருந்த அந்த இளம்பெண், தன்னை அழைத்து வந்த தோழியையும் கண்டபடி திட்டியவாறு உளறிக் கொண்ட இருந்தார். இளம்பெண் அணிந்திருந்த பேண்ட், இடுப்பில் நிற்காமல் இறங்கிய நிலையில் இருந்தது. அவரை அழைத்து வந்த தோழி, அதையும் சரி செய்து கொண்டு கை தாங்கலாக அழைத்து வந்தார். அப்படி இருந்தும் போதையில் இருந்த இளம்பெண் அடம் பிடித்தவாறு தள்ளாடிய நிலையில் வந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், உடன் வந்த இளம்பெண்ணிடம் விசாரித்த போது, வள்ளியூருக்கு செல்ல வேண்டும். இவளுக்கு யாரோ மது வாங்கி குடிக்க வைத்துள்ளனர் என கூறினார்.
பின்னர் அங்கிருந்த டிரைவர், கண்டக்டர்கள் சிலர் சேர்ந்து இருவரையும் வள்ளியூர் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பஸ்சுக்குள் ஏறியதும், முன் பக்க இருக்கையில் போதையில் இருந்த இளம்பெண் மல்லாந்து படுத்துக் கொண்டார். இந்த காலத்தில் இளம்பெண்கள் இப்படி ஆகி விட்டார்களே... என அங்கிருந்த பயணிகள் மற்றும் பெண்கள் மன வருத்தத்துடன் கூறி சென்றனர். இது குறித்து அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில் இரு இளம்பெண்களும், கன்னியாகுமரியில் இருந்து ஆட்டோவில் வந்து இறங்கினர். இரவில் வாலிபர்களுடன் ரிசார்ட் ஒன்றில் பார்ட்டிக்கு சென்று விட்டு வருவதாக போதையில் உளறிய இளம்பெண் கூறினார் என்றனர்.