நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு வரும் டிச. 1ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை!
நாகை: நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு வரும் டிச. 1ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டு தோறும் பெரிய கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான 469-வது பெரிய கந்தூரி விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மறுநாள் 1ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும்நிகழ்ச்சியும், கந்தூரி விழாவும் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை தர்கா தலைமை அறங்காவலர் செய்யது முகம்மது காஜி ஹு சாஹிப் மற்றும் போர்டு ஆப் டிரஸ்டிகள் செய்து வருகின்றன. இந்நிலையில், நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு வரும் டிச. 1ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் டிச. 13ம் தேதி பணி நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.