நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பலில் பயணிக்க மாணவர்களுக்கு கட்டண சலுகை ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட்
நாகை: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் சேவை 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது. போதிய பயணிகள் வராத காரணத்தால் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து சுபம் நிறுவனம் சார்பில் மீண்டும் சிவகங்கை என்ற பெயருடன் நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் சேவை துவங்கப்பட்டது.சிவகங்கை கப்பல் சேவை தொடங்கி நேற்றுடன் (16ம் தேதி) ஓராண்டு நிறைவு பெற்றது. இதைதொடர்ந்து இரண்டாமாண்டு தொடக்க விழா நேற்று நடந்தது. இலங்கை செல்வதற்காக நாகை துறைமுகம் வந்த பயணிகளுக்கு கப்பல் நிர்வாகம் சார்பில் உரிமையாளர் சுந்தர்ராஜன் மாலை அணிவித்து பரிசு வழங்கி வரவேற்றார். இதைதொடர்ந்து கப்பலுக்குள் மும்மத பிரார்த்தனை நடந்தது. பின்னர் மும்மதத்தை சேர்ந்தவர்கள் கொடியசைத்து கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தனர்.
அப்போது உரிமையாளர் சுந்தர்ராஜன் கூறியதாவது: கடந்த ஓராண்டில் 20,098 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் பயணம் செய்துள்ளனர். இந்த பயணம் இருநாட்டின் கலாசாரம், பண்பாட்டை மேம்பட செய்துள்ளது. கப்பலில் வரிவிலக்குடன் உயர்தர மதுபானங்கள் விற்பனை, துரித உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை, இலவச வைபை என பயணிகளை கவர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரண்டாமாண்டு தொடக்க விழா சலுகையாக நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு செல்ல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் மூன்று பகல், இரண்டு இரவு இலங்கையில் தங்குவதற்கு கப்பல் டிக்கெட் கட்டணத்தோடு ரூ.9,999 மட்டும் என சிறப்பு சலுகை திட்டம் உள்ளது. இதற்கு முன் டிக்கெட் கட்டணம் மட்டும் ரூ.8,000 ஆகும். அறை வாடகை, உணவு, மற்ற செலவுகளை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது, சலுகை கட்டணம் ரூ.9,999 மட்டும். அதேபோல் மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்படும் என்றார்.