குரும்பூரில் நள்ளிரவு பரபரப்பு; பெண் வேடமிட்டு வீட்டின் கதவுகளை தட்டும் மர்மநபர்: அச்சத்தில் பொதுமக்கள், காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
உடன்குடி: குரும்பூர் பகுதியில் பெண் வேடமிட்ட மர்ம நபர், இரவு நேரங்களில் வீட்டின் கதவுகளை தட்டுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலையே செய்து வருகின்றனர். வளர்ச்சியின் சூழ்நிலைக்கு ஏற்ப நாள்தோறும் ஒவ்வொரு வகையில் ஏமாற்றுவது, திருடுவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. ஏமாற்றுபவர்கள், திருடுபவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான தகவல் பரவினாலும் தொடர்ந்து ஏமாற்றுவது, திருட்டு சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் கரூர் பகுதியில் இரவு நேரத்தில் பெண் ஒருவர் உதவி எனக் கூறி வீட்டின் கதவுகளை தட்டி, சத்தமிட்டு கதறுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் தற்போது குரும்பூர் பகுதியில் வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள், பெண்கள், ஆண்கள் உதவி இல்லாத வீடுகள் என குறிவைத்து வெள்ளை நிற சேலை அணிந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் வீட்டின் கதவுகளை தட்டி உதவி கேட்பது போல் நடித்து வருகிறார். மேலும் இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டங்களும் அதிக அளவில் உள்ளது.
இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து குரும்பூர் புறையூர் பகுதியில் அந்த மர்ம நபரை அங்குள்ள பொதுமக்கள் அடித்து துரத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும்படி சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பி வருகின்றனர். எனவே மர்ம நபர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.