மயிலாப்பூரில் 10 நாள் கோலாகலம் நவராத்திரி விழா நாளை தொடக்கம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர்- கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நவராத்திரி பெருவிழா நாளை தொடங்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நவராத்திரி பெருவிழா கோயில்கள் சார்பில் சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலுவுடன் நாளை முதல் வரும் 1ம் தேதி வரை 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு வழிபாடும், இசை மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக விநாயகர் அகவல் மற்றும் அபிராமி அந்தாதியுடன் தமிழ் இசைச்சுடர் சுசித்ரா பாலசுப்பிரமணியம் பக்தி இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. தினமும் ஒரு வழிபாட்டுடன் இறையருட் செல்வன் எச்.சூரியநாராயணன், சின்னத்திரை புகழ் அருணா மற்றும் அன்பு குழுவினரின் பக்தி இசை, கலைமாமணி மாலதி,
சின்னத்திரை புகழ் முத்துசிற்பி மற்றும் கீர்த்தனாஸ் குழுவினரின் பக்தி இசை, தேசிய விருது பெற்ற டாக்டர் ஆர்.காஷ்யபமகேஷ் குழுவினரின் பக்தி இசை, நாட்டிய சிரோன்மணி உமா தினேஷ் - சாய் முத்ரா நடன குழுவினரின பரத நாட்டியம், ரிஷிப்ரியா குருபிரசாத் குழுவினரின் பக்தி இசை, கலைமாமணி தேச மங்கையர்க்கரசி ஆன்மிக சொற்பொழிவு, நிருத்ய நாட்டியாலயா மற்றும் ஸ்ரீஞானமுத்ரா அகாடமி குழுவினரின் பரதம், சின்னத்திரை புகழ் சியாமளா,
செல்வி சஜினி மற்றும் ரிதம் குழுவினரின் பக்தி இசை, கலைமாமணி வேல்முருகன் மற்றும் சின்னத்திரை புகழ் திருமதி சுமதிஸ்ரீ ஆகியோரின் பக்தி களஞ்சியம், கின்னஸ் புகழ் விநாயகா நாட்டியாலயாவின் பரதம், கலைமாமணி கோபிகா வர்மாவின் மோகினி ஆட்டம், கலைமாமணி வீரமணி ராஜு குழுவினரின் பக்தி இசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
கோயில்கள் சார்பில் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா நிகழ்ச்சிகளில் தவத்திரு ஆதீனப் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமய சான்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.