முத்துராமலிங்க தேவர் பிறந்தநாளை பள்ளி, கல்லூரிகளில் மாணவர் திருவிழாவாக கொண்டாட வேண்டும்: பாஜ வலியுறுத்தல்
சென்னை: தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் நேற்று வெளியிட்ட அறிக்கை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழாவான தேவர் ஜெயந்தியை, வரும் அக்டோபர் 30ம் தேதி பள்ளி, கல்லூரிகளில் மாணவர் திருவிழாவாக கொண்டாட வேண்டும். காந்தி, அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என தேச நலனுக்காக சிந்தித்து செயல்பட்டு, வாழ்ந்து மறைந்த அனைத்து தலைவர்களின் தியாகங்களையும், வாழ்வியல் முறைகளையும், கருத்துக்களையும் மாணவர்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க அரசு தீவிர முனைப்பு காட்ட
வேண்டும்.
முத்துராமலிங்க தேவர், தனிமனித ஒழுக்கத்திலும், மனிதநேயத்திலும் எல்லோருக்கும் இலக்கணமாக வாழ்ந்த சிந்தனையாளர். மாணவ சமுதாயத்தை முன்னேற்றும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளை ‘‘ஒழுக்கம், ஒற்றுமை, ஒருமைப்பாட்டு தினம்” என அறிவித்து பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட ஆணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.