இஸ்லாமியர்கள் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சர்ச்சை பேச்சு!
டெல்லி: வங்காளதேசம், பாகிஸ்தான் ஊடுருவல்களால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பே காரணம் என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
சுதந்திரத்திற்குப் பின் பாகிஸ்தானில் இந்துக்கள் 13%, சிறுபான்மையினர் 1.2% இருந்த நிலையில் தற்போது 1.73% மட்டுமே உள்ளனர். வங்கதேசத்தில் 22 சதவீதமாக இருந்த இந்துக்கள் 7.9% மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட ஊடுருவல்களை பட்டியலிட்டு அமித்ஷா குற்றச்சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நரேந்திர மோகன் நினைவு சொற்பொழிவு மற்றும் இலக்கிய படைப்பு விருதுகளில் பேசிய அமித்ஷா; "முஸ்லிம் மக்கள் தொகை 24.6 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இந்து மக்கள் தொகை 4.5 சதவீதம் குறைந்துள்ளது. இது கருவுறுதல் அல்ல, வங்காளதேசம், பாகிஸ்தான் ஊடுருவலால் நிகழ்ந்துள்ளது.
ஊடுருவுபவர்களைக் கண்டறிதல், நீக்குதல் மற்றும் நாடு கடத்தல் செயல்முறையை நாங்கள் பின்பற்றுவோம். இந்த நாட்டின் குடிமக்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை கிடைக்க வேண்டும். உலகில் யாராவது தடையின்றி இங்கு வர அனுமதிக்கப்பட்டால், நம் நாடு ஒரு தர்மசாலையாக மாறும்" என பேசினார்.