மும்பை பங்குச்சந்தையில் ரூ.35 கோடி இழந்த முதியவர்: 4 ஆண்டுக்கு பின் தெரிந்த சோகம்
மும்பை: மகாராஷ்டிராவின் மதுங்கா மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் பாரத் ஹரக்சந்த் ஷா(72). கடந்த 2020ம் ஆண்டு நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி , பங்குசந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டார். இதற்காக அவரும், அவரது மனைவியும் இணைந்து குளோப் கேபிடல் மார்க்கெட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து டீமேட் கணக்கை துவக்கினர். தந்தையிடம் இருந்து கிடைத்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை அந்த கணக்கிற்கு மாற்றினர். அவருக்கு உதவுவதற்கு அக்சய் பாரியா மற்றும் கரன் சிரோயா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களை நம்பிய பாரத் ஹரக்சந்த் ஷாவும் அனைத்து அவர்கள்கேட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்தார்.
ஆனால் 2024 ஜூலை மாதம் குளோப் கேப்பிடல் ரிஸ்க் நிர்வாகத்துறையிடம் இருந்து, பாரத் ஹரக்சந்த் ஷாவுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில், உங்களின் கணக்கில் 35 கோடி ரூபாய் கடன் உள்ளது என தெரிவித்தனர். விசாரணையில் அவரது கணக்கில் இருந்து முறையற்ற முறையில் வர்த்தகம் நடந்ததால் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தனது எஞ்சிய பங்குகளை விற்று 35 கோடி ரூபாய் கடனை பாரத் ஹரக்சந்த் ஷா அடைத்துள்ளார். அவரது புகாரில் பேரில் தற்போது மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த மோசடி குறித்து விசாரித்து வருகிறார்கள்.