பல வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பாஜவுடன் ஆதவ் அர்ஜுனா ரகசிய கூட்டு: எடப்பாடிக்கு செக் வைக்க பலே பிளான்; அமித்ஷாவிடம் சரண் பற்றி பரபரப்பு தகவல்கள்
சென்னை: பல வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, பாஜவுடன் ஆதவ் அர்ஜுனாவின் ரகசிய கூட்டு தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கட்சி தொடங்கிய திட்டமே டெல்லியால் உருவாக்கப்பட்டது என்று ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல்களை பாஜ தலைவர்களும், தவெக நிர்வாகிகளும் மறுத்தனர். ஆனால், திடீரென விஜய்க்கு ஒய் கேட்டகிரி பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கியது ஒன்றிய அரசு. இப்படி பாதுகாப்புகளை வழங்கினால், நடிகர் விஜய் தன் பக்கம் வந்துவிடுவார் என்று கருதியது பாஜ. அதற்கு முக்கிய காரணம், சில ஆண்டுகளுக்கு முன்னர் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக வருமான வரித்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நாட்களில் தன்னை காப்பாற்றிக் கொள்ள, தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வந்த மோடியை, கோவையில் வைத்து நடிகர் விஜய் சந்தித்துப் பேசினார்.
அதேபோல, பாதுகாப்பு வழங்கியவுடன் தங்கள் பக்கம் விஜய் வந்துவிடுவார் என்று கருதியது ஒன்றிய அரசு. ஆனால் நடிகர் விஜய் பாஜ பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. பாஜதான் தனது கொள்கை எதிரி என்று அறிவித்தார். இதனால், நேரடியாக விஜயை வளைப்பதற்கு பதில் மறைமுகமாக வளைத்தது. பாஜவின் துருப்புச்சீட்டுதான் ஆதவ் அர்ஜுனா. இவர் மீதும், இவரது மாமனார் லாட்டரி மார்ட்டின் மீதும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் வழக்குகள் உள்ளன. இவர்களது வீடு, அலுவலகங்கள், நிறுவனங்களில் பலமுறை வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் அதிரடி சோதனை நடத்தின. இதனால் இக்கட்டில் சிக்கியது மார்ட்டின் குடும்பம்.
இதைக் காட்டித்தான் ஆதவ் அர்ஜுனாவை ஒன்றிய அரசு இயக்கத் தொடங்கியது. அப்போது திமுகவில் பதவி ஏதாவது வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் ஆதவ். ஆனால் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மட்டுமே பதவி என்று தலைமை கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், நைசாக விசிக கட்சியில் இணைந்தார். அங்கு மாநில நிர்வாக பொறுப்புகளை வாங்கினார். அங்கு இருந்தபடியே கூட்டணியை உடைக்கும் வேலையை தொடங்கினார். திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறும் என்று அதிமுகவும், பாஜவும் கூறத் தொடங்கின.
அந்த சமயத்தில் திமுக கூட்டணிக்கு எதிரான கருத்துகளை ஆதவ் கூறத் தொடங்கினார். இதனால் அவருக்கு விசிகவிலேயே எதிர்ப்புகள் ஏற்பட்டது. முக்கியத் தலைவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். செயற்குழுவிலும் விவாதிக்கப்பட்டது. ஆனால் கூட்டம் முடிந்தவுடன் மீண்டும் திமுக கூட்டணிக்கு எதிராக பேசினார். தனக்கு பதவி கொடுக்காத திமுகவை பழிவாங்குவதற்காகவே கூட்டணியை உடைக்கிறேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதாக விசிகவினரே குற்றம்சாட்டினர். இதனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
திமுக கூட்டணியை உடைக்க ஆதவை வைத்து பாஜ நடத்திய பிளான் நொறுங்கிவிட்டது. இதனால் அடுத்த பிளானை கையில் எடுத்தது ஒன்றிய அரசு. அப்போதுதான் விஜய் கட்சித் தொடங்கினார். இதனால் விஜய் கட்சியில் பாஜவின் திட்டபடி சேர்ந்தார் ஆதவ் அர்ஜுனா. அங்கும் விஜய் கட்சியின் மாநாட்டு செலவுகளை ஏற்றுக் கொண்டார். இதை பார்த்ததும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட கட்சி நிர்வாகிகளையும் தனது பண பலத்தால் வளைத்துப் போட்டார். தற்போது விஜய் மட்டுமல்ல, நிர்வாகிகளும் அவரது பாக்கெட்டில்.
இதனால், டெல்லியின் ஆட்டுவித்தலுக்கு ஏற்ப அவர் ஆடத்தொடங்கினார். தமிழக அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறும்படி கேட்டுக் கொண்டதால், ஆதவின் எண்ணப்படியே விஜய் பேச்சுக்கான அறிக்கை தயாரானது. இதனால் பெயருக்குத்தான் பாஜவை பேசுவார். எங்குமே மோடியைப் பற்றியோ, அமித்ஷாவைப் பற்றியோ குற்றம்சாட்ட மாட்டார். ஆனால் தமிழக முதல்வரைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வார். மார்ட்டின் குடும்பத்திற்கும் பாஜவுக்கும் உள்ள உறவுக்கு பெரிய சாட்சியே, அவர் அக்கட்சிக்கு மட்டும் வழங்கிய பல ஆயிரம் கோடி தேர்தல் நிதிதான்.
இதனால்தான் ஏற்கனவே திமுக மீது வெறுப்பில் இருந்த ஆதவ் அர்ஜுனா, பாஜவுடன் ரகசிய கூட்டு சேர்ந்து, விஜயை முழுமையான தமிழக அரசின் எதிர்ப்பு அரசியலுக்கு கொண்டு வந்தார். பண பலம் மிக்க ஆதவ் கைப்பிடிக்குள் தற்போது விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் சென்று விட்டனர். இதனால்தான் விஜய் நடத்திய ஒவ்வொரு கூட்டத்திலும் உயிரிழப்புகள் நடந்தாலும், இதை விட பெரிய சம்பவம் நடக்கும்வரை திட்டத்தை மாற்றாமல் பார்த்துக் கொண்டார் ஆதவ் அர்ஜுனா. இதனால்தான் கரூர் கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டாலும் அவர்தான் விடாப்படியாக விஜயின் பஸ்சை கூட்டத்திற்குள் செல்லும்படி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாலை பெரிதாக இருந்தாலும், பஸ்சும் பெரிதாக இருந்தது. அதாவது பஸ் நின்றால் கண்டிப்பாக நெரிசல் ஏற்படும் என்று தெரிந்து, போலீசார் எச்சரிக்கை செய்திருந்தனர். ஆனால் போலீசாரின் எச்சரிக்கையை வேண்டும் என்றே ஆதவ்தான் உதாசீனப்படுத்தி, பஸ்சை இயக்கியுள்ளார். இதற்கு காரணம், மொத்த செலவையும் ஆதவ் பார்த்துக் கொள்வதால், அவரை மீறி விஜயால் எதுவும் செய்ய முடியாத நிலைதான் தற்போது தவெகவில் உள்ளது என்கின்றனர் அந்த கட்சியின் நிர்வாகிகள். இதனால் பெரிதாக ஏதோ நடக்க வேண்டும் என்று ஆதவ் எதிர்பார்த்துள்ளார். ஆனால் இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடக்கும் என்று அவர் நினைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவேதான், பெரிதாக நடந்தவுடன் தனதுக்கு ஆதரவு கேட்டு ஒன்றிய உள்துறை அமைச்சரின் காலில் விழத்தான் டெல்லி சென்றிருப்பதாக பாஜவின் டெல்லி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். பாஜவும் அடுத்த ஒரு அதிரடி திட்டத்தை தயாரித்துள்ளதாம். எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக முறைத்துக் கொண்டு வருகிறார். கூட்டணி அமைச்சரவைக்கு ஒப்புக் கொள்ள மறுக்கிறார். இதனால்தான் அமித்ஷாவும் அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.
ஆனால் பாஜவின் கண்டிஷன்படி விஜய், கூட்டணி ஆட்சி திட்டத்திற்கு ஒப்புக் கொள்வதால், அவருடன் கூட்டணியை ஆதவ் மூலம் ஏற்படுத்த கடைசிக்கட்ட திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு கூட்டணி அரசு அமைக்கும் பட்சத்தில், பாஜவுக்கு முதல்வர் பதவி, ஆதவுக்கு முக்கிய பதவி என்று டீல் பேசியுள்ளதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு சம்மதித்தால், ஆதவ் மட்டுமல்ல விஜயையும் காப்பாற்ற டெல்லி தீவிரமாக களம் இறங்கும் என்கின்றனர் டெல்லி தலைவர்கள். ஆதவின் டெல்லி காய் நகர்த்தல்கள் வெற்றி பெறுமா என்பது ஓரிரு நாளில் தெரிந்து விடும் என்கின்றனர் பாஜவின் டெல்லி தலைவர்கள். இது தெரிந்ததும் எடப்பாடி பழனிசாமி கடும் அப்செட்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
* மொத்த செலவையும் ஆதவ் பார்த்துக் கொள்வதால், அவரை மீறி விஜயால் எதுவும் செய்ய முடியாத நிலைதான் தற்போது தவெகவில் உள்ளது என்கின்றனர் அந்த கட்சியின் நிர்வாகிகள்.
* டெல்லியின் ஆட்டுவித்தலுக்கு ஏற்ப அவர் ஆடத்தொடங்கினார். ஆதவின் எண்ணப்படியே விஜய் பேச்சுக்கான அறிக்கை தயாரானது.
* பாஜவின் கண்டிஷன்படி விஜய், கூட்டணி ஆட்சி திட்டத்திற்கு ஒப்புக் கொள்வதால், பாஜவுக்கு முதல்வர் பதவி, ஆதவுக்கு முக்கிய பதவி என்று டீல் பேசியுள்ளதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.