உ.பியில்தான் இந்த அவலம்: குரங்கு சேட்டையால் மரத்தில் இருந்து பணமழை
லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் அவுரையா மாவட்டம் தொண்டாபூர் கிராமத்தை சேர்ந்த அனுஜ்குமார். இவர், தனது தந்தை ரோகிதாஸ் சந்திராவுடன் பத்திரப்பதிவு செய்வதற்காக வந்திருந்தார். அவர்கள் தங்கள் பைக்கில் ரூ.80 ஆயிரம் ரொக்கத்தை சிறிய பையில் வைத்திருந்தனர். ரோகிதாஸ், தனது வக்கீலுடன் பத்திரப்பதிவு குறித்து பேசி கொண்டிருந்த நேரத்தில், அங்கு வந்த குரங்கு, கண்ணிமைக்கும் நேரத்தில் பணப்பையை உணவு பொட்டலம் என்று நினைத்து தூக்கி கொண்டு அருகில் இருந்த மரத்தின் உச்சிக்கு ஓடியது.
அங்கிருந்து பணப்பையை பிரித்த குரங்கு, அதில் உணவு இல்லாததால் ஏமாற்றத்துடன் ரூபாய்த்தாள்களை பிரித்து கீழே வீசியது. சில நோட்டுகளை கிழித்து வீசியது. மரத்தில் இருந்து பண மழை கொட்டியதால் அங்கிருந்த பொதுமக்கள் அவற்றை எடுக்க முண்டியடித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் ரோகிதாசுக்கு ரூ.52 ஆயிரம் மட்டுமே மீட்டு கொடுக்கப்பட்டது. மற்ற நோட்டுகள் கிழிந்தும், பதுக்கப்பட்டும் மாயமாகின. இதுபற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பல லட்சம் பேரின் பார்வையை ஈர்த்தது.