மோடி தனது முகத்தை இனி காட்ட முடியாது; வாக்கு திருட்டுக்கு எதிராக ஹைட்ரஜன் குண்டு வருகிறது: பீகார் பேரணியில் ராகுல்காந்தி ஆவேசம்
பாட்னா: பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த சூழலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி பீகார் மாநிலம் சாசராமில் வாக்காளர் அதிகார யாத்திரையை தொடங்கினார். 1,300 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்த யாத்திரையின் இறுதி நிகழ்ச்சி நேற்று பாட்னாவில் நடந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் கார்கே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் , ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பேபி, திரிணமூல் காங்கிரஸ் எம்பி யூசுப் பதான், சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) சஞ்சய் ராவத் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பாட்னாவில் உள்ள காந்தி சிலையில் இருந்து தொடங்கிய யாத்திரை அம்பேத்கர் பூங்காவில் நிறைவடைய இருந்தது. ஆனால் டாக் பங்களா கிராசிங்கில் காவல்துறையினரால் யாத்திரை பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. அங்கு திரண்டு இருந்த கூட்டத்தினர் மத்தியில் ராகுல்காந்தி ஆவேசமாக பேசியதாவது:மகாத்மா காந்தியை கொன்ற சக்திகள் இன்று அரசியலமைப்பை கொலை செய்ய முயற்சி செய்கின்றன. அரசியலமைப்பை பா.ஜ கொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதனால்தான் இந்த யாத்திரை நடத்தப்பட்டது. இந்த யாத்திரைக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதிக எண்ணிக்கையில் மக்கள் இதில் பங்கேற்று வாக்கு திருட்டு குறித்து கோஷங்களை எழுப்பினர்.
எங்களுக்கு எதிராக பா.ஜவினர் கருப்பு கொடி காட்டினார்கள். ஆனால் பாஜவினருக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அணுகுண்டைவிட பெரிய ஒன்றை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது ஹைட்ரஜன் குண்டு. மகாதேவ்புராவில், நாங்கள் அணுகுண்டைக் காட்டினோம். பாஜவினரே, நீங்கள் தயாராக இருங்கள். ஒரு ஹைட்ரஜன் குண்டு வர இருக்கிறது. விரைவில் வாக்குத் திருட்டின் உண்மையை மக்கள் கண்டுபிடிப்பார்கள். அப்போது, பிரதமர் மோடி நாட்டு மக்கள் முன் தனது முகத்தை காட்ட முடியாது. இது உறுதி.
வாக்கு திருட்டு என்றால் அது உரிமைகளின் திருட்டு, ஜனநாயகத்தின் திருட்டு, வேலைவாய்ப்பின் திருட்டு. எனவே, இவ்விஷயத்தில் பீகார் இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-சிவசேனா (உத்தவ்பிரிவு)-தேசிய வாத காங்கிரஸ்(சரத்பவார் பிரிவு) கட்சிகளிடமிருந்து தேர்தல் திருடப்பட்டது. இது நூறு சதவீதம் உண்மை. மகாராஷ்டிராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களுக்கு இடையில் ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். புதிய வாக்காளர்கள் வந்து வாக்களித்தனர். நாடாளுமன்ற தேர்தல் போல் எங்களுக்கு ஒரே மாதிரியான வாக்குகள் கிடைத்தன.
ஆனால் அனைத்து புதிய வாக்குகளும் பாஜ கூட்டணிக்கு சென்றன. மக்களவைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம், ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் அழிக்கப்பட்டோம். அவர்கள் உங்கள் வாக்குகளை மட்டும் பறிக்கவில்லை, அவர்கள் உங்கள் ரேஷன் கார்டு மற்றும் நிலத்தைப் பறித்து, அதானி, அம்பானிக்குக் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பீகார் முதல்வர் ஊழலின் பீஷ்மர்;
பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில்,’ பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஊழலின் பீஷ்மராக மாறிவிட்டார். ஏனெனில் அவரது அரசு பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் அவரது அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவார்கள்’ என்றார்.
வாக்காளர்களை அவமதிக்கிறார் ராகுல்: பாஜ
பீகார் யாத்திரையில் ராகுல்காந்தி பேச்சுக்கு பா.ஜ கண்டனம் தெரிவித்துள்ளது. பா.ஜ மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,’ பொறுப்பற்ற கருத்துகளால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தனது பதவியை ராகுல்காந்தி இழிவுபடுத்துகிறார். வாக்கு திருட்டு என்ற பெயரில் வாக்காளர்களை ராகுல்காந்தி அவமதிக்கிறார். இது ஆணவம். அவரது ஆணவத்திற்காக அவரைத் தண்டிக்குமாறு வாக்காளர்களிடம் நாங்கள் கூறுவோம்’ என்றார்.
பாஜ விருப்பப்படி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பேசுகையில்,’ பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி விருப்பப்படி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் மக்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காக இந்தப் பயிற்சி முதல் முறையாக நடக்கிறது. பா.ஜ பல ஆண்டுகளாக வாக்குத்திருட்டில் ஈடுபட்டு வருகிறது. மாநில அரசுகளைக் கவிழ்க்க குதிரை பேரம் நடத்தி வருகிறது. பா.ஜவை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்றார்.