மோடி கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு 50 மார்க்?: உத்தரகாண்ட் பல்கலை பெயரில் பரவிய அறிவிப்பால் சர்ச்சை
டேராடூன்: பிரதமர் மோடி கூட்டத்தில் பங்கேற்றால் 50 மதிப்பெண் வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் பல்கலை பெயரில் பரவிய அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது. பிரதமர் மோடி கடந்த9ஆம் தேதி உத்தரகாண்ட் மாநில வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அவரது கூட்டத்தில் தேவ்பூமி உத்தரகாண்ட் பல்கலை மாணவர்கள் கலந்து கொண்டால் 50 மதிப்பெண் வழங்கப்படும் என்றும் பாரதிய ஞான பரம்பரா திட்டத்தின் கீழ் இந்த மதிப்பெண் வழங்கப்படும் என்று தகவல் பரவியது.
இதை பகிர்ந்து கொண்ட உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறுகையில்,’ மோடியின் பேரணியில் கலந்து கொண்டதற்கு தேவ் பூமி உத்தரகண்ட் பல்கலைக்கழகம் 50 மதிப்பெண்கள் வழங்கும். மோடி மோடி என்று கூச்சலிட்டது எத்தனை பேர்?’ என்று பகிர்ந்துள்ளார். ஆனால் விசாரித்ததில் பல்கலை சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது. பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் அமன் பன்சால் இதுபற்றி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.