டிரம்பை பார்த்து பயப்படுகிறார் மோடி: ராகுல் காந்தி விமர்சனம்
புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி, தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதனை ராகுல் காந்தி விமர்சித்து, டிரம்பை பார்த்து பிரதமர் மோடி பயப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதுபற்றி ராகுல் காந்தி எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: டிரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார். அதாவது, ரஷ்யாவின் எண்ணெய்யை இந்தியா வாங்காது என்று முடிவு செய்து டிரம்பை அறிவிக்க அனுமதிக்கிறார். மீண்டும் மீண்டும் அவமதிக்கப்பட்ட பிறகும் வாழ்த்து செய்தியை அனுப்பி கொண்டே இருக்கிறார். அமெரிக்கா செல்லும் நிதியமைச்சரின் பயணத்தை ரத்து செய்தார். ஷார்ம் எல்-ஷேய்க் பயணத்தை தவிர்த்தார். ஆபரேஷன் சிந்தூர் குறித்த டிரம்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.