வாக்குகளுக்காக பிரச்சார மேடையில் பிரதமர் மோடி நடனமும் ஆடுவார் : ராகுல் காந்தி காட்டம்
பாட்னா : அரசியல் சாசனம் அளித்துள்ள கல்வி , வாக்குரிமை, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அனைத்து உரிமைகளையும் பறிக்க பாஜக சதி செய்வதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். பீகார் முசாபர்பூர் நகரில் ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு பொது கூட்டத்தில் பேசிய அவர்," பீகார் மக்களின் விருப்பங்களுக்கு எதிரான ஒரு அரசை அமைக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதற்காக மக்களின் வாக்குகளை திருடும் நோக்கில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பா.ஜ.க.வின் இந்த சதித்திட்டத்தை முறியடிக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
வாக்குரிமை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அனைத்து உரிமைகளும் அரசியல் சாசனம் அளித்துள்ளது. மக்களின் உரிமைகளை பறிக்கவே பா.ஜ.க. முயற்சி செய்கிறது.பல்கலைக் கழகங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாஜக இயக்குகிறது. வாக்குகளுக்காக பிரச்சார மேடையில் பிரதமர் மோடி நடனமும் ஆடுவார். மராட்டியம், ஹரியானாவில் செய்ததை போல பீகாரிலும் வாக்குகளை திருட முயற்சிக்கின்றனர். பிரதமர் மோடியின் நாடகத்தால் திசை திரும்ப வேண்டாம் என பீகார் மக்களை கேட்டுக் கொள்கிறேன்,"இவ்வாறு தெரிவித்தார்.