வந்தவாசி, அரூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: சட்டப்பேரவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை
சென்னை: வந்தவாசி, அரூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், ”உடன் பிறப்பே வா” என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தவாசி, அரூர் சட்டமன்ற தொகுதியின் நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து பேசினார். இதில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சந்திப்பின் போது சட்டப்பேரவை தொகுதி நிலவரம், கட்சி வளர்ச்சி பணி, ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். திமுக அரசு செயல்படுத்தியுள்ள மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் நிர்வாகிகளுடன் கேட்டறிந்தார். திமுக அரசு செய்துள்ள திட்டங்களை மக்களை நேரடியாக சந்தித்து விளக்க வேண்டும். கடந்த தேர்தலை விட வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியை வெற்றி பெற பாடுபட வேண்டும். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி வாகை சூடி மீண்டும் திமுக ஆட்சி அமைய உறுதி ஏற்க வேண்டும் என்று அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னை சந்தித்த அனைத்து நிர்வாகிகளுக்கும் புத்தகங்களை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.