வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வால்டாக்ஸ் சாலையில் குளிரூட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் சேகர்பாபு பணிகளை தொடங்கி வைத்தார்
சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் , சிஎம்டிஏ சார்பில் வால்டாக்ஸ் சாலையில் கட்டப்பட உள்ள குளிரூட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். துறைமுகம் சட்டமன்ற தொகுதி, வால்டாக்ஸ் சாலையில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிஎம்டிஏ சார்பில் கட்டப்படவுள்ள குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்திற்கான பணியினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளான வால்டாக்ஸ் சாலை, ஒத்தவாடை தெருவில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணிகளையும், வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் சி.எம்.டி.ஏ. சார்பில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு நிலையம், 844 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், விளையாட்டுத் திடல், சமூக நலக்கூடம், மாநகராட்சி அச்சகம் என ‘‘ஒருங்கிணைந்த வளாகம்” கட்டுமான பணிகளையும் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாலையில் சி.எம்.டி.ஏ. சார்பில் கட்டப்பட்டு வரும் 776 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பணிகளையும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக்குழுத் தலைவர் ஸ்ரீராமுலு, எம்டிசி இணை மேலாண் இயக்குநர் ராகவன், பொது மேலாளர் (இயக்கம்) நெடுஞ்செழியன், தலைமை பொறியாளர் மகாவிஷ்ணு, கண்காணிப்பு பொறியாளர் பாலமுருகன், உள்ளாட்சித் பிரதிநிதிகள் எஸ்.முரளி, அபாரன்ஜி, ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் தாஹா நவீன், பரிமளம், மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ அலுவலர்கள் உடனிருந்தனர்.