அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆய்வு: அமலாக்கத்துறை தகவல்
சென்னை: அமலாக்கத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் பழனி தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் தொடர்புடைய இடங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 16ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு ஊழல் தடுப்புப் பிரிவு, பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. ஐ.பெரியசாமி வருவாய்த்துறை அமைச்சராக இருந்த போது, சுமார் ரூ.2 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்த செய்த குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஐ.பெரியசாமி, மகன் ஐ.பி.செந்தில்குமார், மகள் இந்திரா ஆகியோர் வீடு மற்றும், ஐ.பெரியசாமி, அவரது இளைய மகள் பிரபு இயக்குநர்களாக இருக்கும் இருளப்பா மில்லில் நடத்தப்பட்ட சோதனையில், சொத்துக்கள், பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும், இருளப்பா மில் வளாகத்தில் இருந்து சில காகித நிறுவனங்கள் இயக்கப்படுவதையும் கண்டறியப்பட்டு, அந்நிறுவனங்களின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. மேலும், பல டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, அவை கணக்காய்வு செய்யப்பட்டு வருகிறது.