தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கட்டுமானம், கம்பி வளைப்பு, தச்சு, மின்பணியாளர், பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அமைத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட தொழில் இனங்களில் அவர்களது திறனை மேம்படுத்த 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியினை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்சி மையத்தில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் 50,000 தொழிலாளர்கள் பயன் பெற ஏதுவாக தெரிவு செய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் ரூ.45.21 கோடி செலவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சியின்போது ஒவ்வொரு தொழிலாளிக்கும் நாளொன்றுக்கு கூலி ரூ.800 வீதம் பயிற்சி காலத்திற்கு ரூ.5600 வழங்கப்படும். இப்பயிற்சியின் மூலம் கட்டுமான தொழிலாளர்களுக்கு புதிய தொழில் நுட்பங்கள், டிஜிட்டல் அளவிடும் கருவிகள் பயன்பாடு போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.