ராணுவ அலுவலகம், கவர்னர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சல் அனுப்பியவருக்கு போலீஸ் வலை
சென்னை: சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் தீவுத்திடல் அருகே உள்ள ராணுவ அலுவலகம், கவர்னர் மாளிகை மற்றும் எஸ்.வி.சேகர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் அளித்தனர்.
கோட்டை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ராணுவ அலுவலகத்திலும், கிண்டி போலீசார் கவர்னர் மாளிகை முழுவதும் சோதனை நடத்தினர். மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகர் வீட்டில் பட்டினப்பாக்கம் போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை நடத்தினர். இது வெறும் புரளி என தெரியவந்தது.
எனவே, வெடி குண்டு மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் ஐடியை வைத்து சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல் நேற்று முன்தினம் அதிமுக தலைமை அலுவலகம் உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு ஒரு வாரத்தில் 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.