எம்ஜிஆரை அவமதிக்கவில்லை: திருமாவளவன் விளக்கம்
திருச்சி: எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை என திருமாவளவன் எம்பி தெரிவித்தார். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று திருச்சி வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசியலில், கடந்த 60 ஆண்டுகளாக எவ்வாறு இயங்கி வருகிறது. அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற உரையில் எம்ஜிஆர் பற்றியும் குறிப்பிட்டேன்.
எம்ஜிஆர், ஜெயலலிதா மீது எனக்கு அதீதமான மதிப்பு உண்டு. குறிப்பாக, அவர்களை பலமுறை மனம் திறந்து பாராட்டியுள்ளேன். தமிழ்நாடு அரசியல் கலைஞரை மையப்படுத்தி எப்படி கலைஞர் எதிர்ப்பு அரசியலாக மாறியது என கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நான் பேசினேன். முக்கியமாக, எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. எம்.ஜி.ஆரை ஒரு ஜாதிக்குள் நான் சுருக்கவில்லை, தவறாக அது புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் அதிமுக இயங்கியது. அது கருணாநிதி எதிர்ப்பை மையப்படுத்தி இயங்கியதாக நான் கூறினேன். ஜெயலலிதா தன்னை பார்ப்பன பெண் என சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக கூறினார். எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் ஜாதி எல்லைகளை கடந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது என எந்த பொருளில் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் என்பதற்கு அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.