வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை பின்பற்றி அவசியமின்றி மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்
சென்னை: வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். டிட்வா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: டிட்வா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். 16 மாநில பேரிடர் மீட்பு படைகளும், 12 தேசிய பேரிடர் மீட்பு படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட வேண்டும். பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதை தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.