விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது; குமரி அரசு மருத்துவ கல்லூரியில் மன நல காப்பகம்: சிகிச்சை, பராமரிப்பு வசதிகளுடன் இயங்கும்
நாகர்கோவில்: இந்தியாவின் தென் கோடி முனையில் உள்ள கன்னியாகுமரிக்கு வட மாநிலங்களில் இருந்து தினசரி மற்றும் வாராந்திர ரயில்கள் உள்ளன. இந்த ரயில்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்திறங்கும் நிலையில் ஆதரவற்ற, கைவிடப்பட்ட, மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மொழி தெரியாமல் ரயில் நிலையங்களில் இருந்து கடை வீதிகளில் வலம் வரும் மன நல நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இப்படி பாதுகாப்பற்ற நிலையில் சுற்றி திரிபவர்களை மீட்டு, அவர்களை அரவணைக்கும் வகையில் அரசு சார்பில் காப்பகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. தற்போது மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற காப்பகங்கள் பாதுகாப்பு களமாக இருந்தாலும், சிகிச்சை முறைகள் இங்கு போதுமானதாக இல்லை.
இது போன்ற நிலைகளை நிவர்த்தி செய்ய கலெக்டர் அழகுமீனா நடவடிக்கை காரணமாக தேசிய நல ஆணையத்தின் சார்பில் அரசு சார்ந்த மன நல காப்பகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மாநில சுகாதார இயக்குனரகத்தின் மேற்பார்வையில் மாவட்ட சுகாதார இணை இயக்குனரக அலுவலகம் இதற்கான இடத்தை தேடி வந்தது. பின்னர் கலெக்டர் அழகுமீனா உத்தரவின் படி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயன்பாடு இல்லாத நிலையில் உள்ள பழைய கட்டிடத்தை புதுப்பித்து அரசு சார்ந்த மன நல காப்பகமாக அமைக்க முடிவெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. தற்போது இந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் மன நல காப்பகம் திறக்கப்பட உள்ளது. இது குறித்து சுகாதார இணை இயக்குனரக அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, கலெக்டர் உத்தரவின் பேரில், இணை இயக்குனர் டாக்டர் ரவிக்குமார் மேற்பார்வையில் தற்போது மன நல காப்பக பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளன.
இந்த காப்பகம் என்.ஜி.ஓ. சார்பில் பராமரிக்கப்படும் காப்பகமாக இருந்தாலும் அரசு சார்ந்த காப்பகமாகவே இருக்கும். இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அதிக பட்சம் 30 நாட்கள் வரை அனுமதித்து பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். அதன் பின்னர் குணமாக வில்லை. உறவினர்கள் யாரும் வர வில்லை என்றால் மாவட்டத்தில் அரசு அங்கீகாரத்துடன் இயக்கும் 18 மன நல காப்பகங்களில் ஏதாவது ஒரு காப்பகத்துக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். தொடர்ந்து அவர்கள் அரசின் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றனர். குமரி மாவட்ட மருத்துவக்கல்லூரியில் உள்ள மன நல காப்பகத்தின் சுவர்களில் இயற்கை தன்மையுடன் வரையப்பட்டுள்ள ஓவியங்களும் வெகுவாக கவர்ந்துள்ளன.