மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மேஸ்திரிக்கு 10 ஆண்டு சிறை
*வேலூர் மகிளா கோர்ட் தீர்ப்பு
வேலூர் : வேலூர் அடுத்த அடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால்(49), மேஸ்திரி. இவர் கடந்த 2013ம் ஆண்டு சுமார் 35 வயது மதிக்கதக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேணுகோபாலை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வேணுகோபால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வேணுகோபாலை, வேலூர் அனைத்து மகளிர் எஸ்ஐ ரேகா மற்றும் போலீசார் கடந்த 6ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுலகிருஷ்ணன், குற்றம் சாட்டப்பட்ட, வேணுகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். இதையடுத்து, போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அரசு தரப்பில் வக்கீல் விக்னேஷ்வரி ஆஜராகி வாதாடினார்.