எம்.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு: அமைச்சர் கோவி. செழியன் தகவல்
சென்னை: 2025 - 26ஆம் கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2025 அன்று முதல் தொடங்கி இன்றுடன் (20.08.2025) முடிவடைகிறது. இந்த கால அவகாசம் 15.09.2025 வரை நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: "தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2025-26ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 11.08.2025 முதல் தொடங்கப்பட்டது.
மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி விண்ணப்பப் பதிவு இன்றுடன் முடிவடைகிறது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தரவரிசையின் படி 26.08.2025 முதல் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடங்கும். இதன் விவரம் SMS மற்றும் e mail மூலம் மாணாக்கர்களுக்கு அனுப்பப்படும். முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2025 அன்று முதல் தொடங்கும்.
எம்.எட். சேர்க்கைகான விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க 21.08.2025 முதல் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக தொடர்ந்து விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் 15.09.2025 வரை மாணாக்கர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்" இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.