நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் பெரும் முறைகேடு : அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்
புதுடெல்லி: நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில், தனியார் கல்லூரிகளில் போலி ஆவணங்கள் மூலம் என்ஆர்ஐ ஒதுக்கீட்டின்கீழ் 18,000 அட்மிஷன் போடப்பட்டது அமலாக்கத் துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் என்ஆர்ஐ மாணவர்கள் பலர் உண்மையில் வெளி நாட்டினர் இல்லை. சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஏஜென்டுகளுக்கு பணம் கொடுத்து போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளனர். உள்நாட்டு மாணவர்களை வெளிநாடு வாழ் இந்தியர்போல காட்ட ஏஜென்டுகளும் போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்துள்ளனர்.
மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் என்ஐஆர் ஒதுக்கீட்டில் முறைகேடாக மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் கல்லூரிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் போலி என்ஆர்ஐ சான்றிதழ்கள் சிக்கியுள்ளன. இதுதொடர்பாக மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வங்கியில் வைத்துள்ள வைப்பு தொகை ரூ.6.42 கோடியை முடக்கியுள்ளது. இதேபோல் முறைகேட்டில் ஈடுபட்ட சில தனியார் கல்லூரிகளின் ரூ.12.33 கோடியை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.