மாட்லாம்பட்டியில் 3 தலைமுறையாக வசிக்கும் குடும்பத்தினருக்கு பட்டா
*கலெக்டர் ஆபீசில் மனு
தர்மபுரி : காரிமங்கலம் அருகே சின்னமாட்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் ஆபீசுக்கு திரண்டு வந்து, கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் சின்னமாட்லாம்பட்டி பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில் 30 குடும்பத்தினர் கடந்த 1963ம் ஆண்டு முதல் 3 தலைமுறையாக வசித்து வருகிறோம். மின் இணைப்பு, ஆதார் கார்டு மற்றும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் பெற்றுள்ளோம்.
பைசுஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மாட்லாம்பட்டி தர்மபுரி -கிருஷ்ணகிரி மெயின் தார்சாலை மேற்கு பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், குடும்பமாக வசித்து வருகிறோம். எங்களுக்கு இன்று வரை வீட்டுமனை பட்டா வழங்கவில்லை.
இதனால், அரசின் சலுகைகளை பெற முடியாமல் தவித்து வருகிறோம். எனவே, எங்கள் குடியிருப்பு வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.