மார்தாவை மடக்கிய எலெனா: அரையிறுதிக்கு முன்னேற்றம்
மான்ட்ரீல்: கனடா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா, கனடா வீராங்கனை விக்டோரியா அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். கனடா ஓபன் டென்னிஸ் போட்டி மான்ட்ரீல், டொரோன்டோ நகரங்களில் நடக்கின்றன. மான்ட்ரீல் நகரில் நேற்று பெண்களுக்கான ஒற்றையர் காலிறுதி ஆட்டங்கள் நடந்தன. முதல் ஆட்டத்தில் கனடாவின் இளம் வீராங்கனை விக்டோரியா எம்போகோ (18 வயது, 85வது ரேங்க்), ஸ்பெயினின் ஜெசிகா மனிரோ (22 வயது, 51வது ரேங்க்) மோதினர்.
இளங்கன்று பயமறியாது என்பது போல் எதை குறித்தும் கவலைப்படாமல் வெற்றி ஒன்றையே குறிகோளாக வைத்து அதிரடியாக விளையாடினார் விக்டோரியா. அதன் பலனாக, விக்டோரியா ஒரு மணி 17 நிமிடங்களில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். ஆயிரம் தரவரிசைப் புள்ளி ஆட்டம் ஒன்றில் விக்டோரியா முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை மார்தா காஸ்டியுக் (23 வயது, 28வது ரேங்க்), கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா (26 வயது, 12வது ரேங்க்) மோதினர். ரைபாகினா முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் வசப்படுத்தினார். அதனையடுத்து 2வது செட்டில் ரைபாகினா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, மார்தா தசைபிடிப்பு காரணமாக வெளியேறினார். அதனால் ரைபாகினா 54 நிமிடங்களில் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார். நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதியில் விக்டோரியா - ரைபாகினா பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.