திருமணத்திற்கு மறுப்பு கிருஷ்ணகிரி அணையில் குதித்த தந்தை, பாட்டி உயிரிழப்பு: தாய், மகள் உயிருடன் மீட்பு
கிருஷ்ணகிரி: ஆந்திர மாநிலம் குப்பம், ஜே.டி.சாலையை சேர்ந்தவர் லட்சுமணமூர்த்தி (50). இவரது மனைவி ஜோதி (40). இவர்களது மகள் கிருத்திகா (20), ஜோதியின் தாயார் சாரதாம்மாள் (75). இவர்கள் 4 பேரும், நேற்று கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு சுற்றுலா பயணிகள்போல் வந்துள்ளனர். காலை 10 மணியளவில், அணையின் தண்ணீர் வெளியேறும் சிறிய மதகின் முன்புறம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவர்கள், திடீரென ஒவ்வொருவராக அணையில் குதித்துள்ளனர்.
அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த சிலர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அணையில் குதித்து, அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில், கிருத்திகா, அவரது தாய் ஜோதி ஆகியோரை மீட்டனர். மேலும், மூதாட்டி சாரதாம்மாளை மீட்க சென்றபோது, தன்னை காப்பாற்ற வந்தவர்களின் கையை கடித்து விட்டு, நீரில் மூழ்கி விட்டார். இதனால் அவரை மீட்க முடியவில்லை. அதேபோல், லட்சுமணமூர்த்தியையும் மீட்க முடியவில்லை. சிறிதுநேரத்தில் அவர்கள் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கிருத்திகாவுக்கு அவரது தாய்மாமனுடன் திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டு, கடந்த வாரம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. ஆனால், இந்த திருமணத்தில் கிருத்திகாவுக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னையில், அனைவரும் ஒன்றாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வந்தது தெரிந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.